குலசேகரம்: திருவட்டாரை அடுத்துள்ள ஆற்றூர் சந்திப்பு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இங்கு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், தினசரி சந்தை மற்றும் மீன் சந்தைகள் செயல்படுகின்றன. இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்தநிலையில் இந்த பகுதியில் கடந்த 3 மாதமாக கேரளா பதிவெண் கொண்ட ஜீப் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருக்கிறது. அதில் எழுதப்பட்டிருந்த பெயரும் மலையாளத்தில் உள்ளது. முதலில் இது பழுதாகி நிற்கிறது என்று பொதுமக்கள் நினைத்தனர். ஆனால் 3 மாதம் ஆன பின்னரும் ஜீப்பை எடுத்து செல்ல யாரும் வரவில்லை. நீண்ட நாட்களாக ஜீப் சாலையோரம் அனாதையாக நிற்பதால் குடிமகன்களின் புகலிடமாக மாறியுள்ளது. தற்போது இரவு நேரங்களில் குடிமகன்களுக்கு பாராகவும், கஞ்சா கும்பலுக்கு மறைவிடமாகவும் ஆகி விட்டது.