போபால்: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கியவரை ஜேசிபி வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய ஒருவரை, ஜேசிபி வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததை அடுத்து, விபத்தில் சிக்கிய அந்த இளைஞனை ஜேசிபி வாகனம் மூலம் அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஜேசிபி-யின் மண் அள்ளும் பகுதியில் அந்த இளைஞரை படுக்க வைத்து, அந்த வாகனத்தில் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அந்த இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.