நெற்பயிரில் இலை உறை கருகல் நோய் கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம்

நீடாமங்கலம் : நெற்பயிரில் இலை உறை கருகல் நோய் பற்றி நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.வேளாண்மை அறிவியல் நிலையம், பூச்சியல்துறை உதவி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆய்வின்போது உறுதி செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நெற்பயிரில் இலை உறை கருகல் நோய் தாக்குதலின் அறிகுறிகளான முட்டை வடிவ அல்லது நீண்ட உருளை வடிவ வடிவத்துடன் கூடிய பழுப்பு கலந்த பச்சை நிற புள்ளிகள் ஆங்காங்கே இருக்கின்றது.

மேலும் அந்தப் புள்ளிகள் பெரிதாகும் போது நடுப்பாகம் சாம்பல் கலந்த வெண்மை நிறமாகவும் ஓரங்கள் கருமை கலந்த பழுப்பு நிறமாகவும் காணப்படும். நாளடைவில் இந்தப் புள்ளிகள் பெரிதாகி ஒன்றோடு ஒன்று இணைந்து அதில் உள்ள திசுக்களை அழிக்கப்படுவதால் இலைகள் முற்றிலும் பசுமை இழந்து சருகு போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். இந்த தாக்குதல் வெளிப்புறத்தில் உள்ள இலைகளில் தொடங்கி பின்னர் உள் புறத்தில் உள்ள இலை உறைகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நோய் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் ஆக காற்றின் ஈரப்பதம் 95 சதவீதத்திற்கு மேலும், வெப்பநிலை 30 லிருந்து 32 டிகிரி செல்சியஸ் அதாவது திடீரென்ற வெப்பநிலை உயர்ந்து அல்லது குறைந்த வெப்பநிலை தோன்றும் போது இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிகப்படியான தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த நோயை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை ஒரு ஏக்கருக்கு 60 கிலோ மண்ணில் இடவேண்டும். செயற்கை பூஞ்சாணக் கொல்லிகளான கார்பண்டசிம் 50 டபள்யூ.பி 200 கிராம் அல்லது அசோக்ஸிஸ்ட்ரோபின் 200 மில்லி ஒரு ஏக்கருக்கு தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் தென்படும் பட்சத்தில் 15 நாட்களுக்கு பிறகு ஒரு முறை தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: