வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை கணவனுக்கு 10 ஆண்டு சிறை: மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: திருமணமான 9 மாதங்களில், வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராவுலபாலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரசன்னா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவருக்கும் 2012 டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது, 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 ஏக்கர் நிலம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் சென்னையில் வேலை கிடைத்ததால், குமாரசாமி தனது மனைவியை அழைத்து வந்து வேளச்சேரியில் வசித்து வந்துள்ளார். அப்போது கூடுதல் நகையும், பணமும் வரதட்சணையாக கேட்டு லட்சுமி பிரசன்னாவை துன்புறுத்திய குமாரசாமி, அவரை வீட்டில்  பூட்டி வைத்தும் சித்ரவதை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த லட்சுமி பிரசன்னா, 2013ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, குமாரசாமிக்கு எதிராக தற்கொலைக்கு தூண்டியது, வரதட்சணை கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேளச்சேரி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.

 இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக், வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களில் இருந்து, லட்சுமி பிரசன்னாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது கணவர் குமாரசாமிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகையில் 10 ஆயிரம் ரூபாயை பலியான பெண்ணின் தந்தைக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: