சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த ஜூலை 17ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் நாடு முழுவதும் 17 லட்சத்து 64 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 9 லட்சத்து 93 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியோரில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் எழுதியதில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 12,840 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் தெரிவித்துள்ளது.