பொங்கல் பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது. பண்டிகை கால நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும். அந்தவகையில், தமிழர் திருநாளான தை பொங்கல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக வெளியூர்களில் பணி புரியும் லட்சக் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். எனவே, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை என்பதால் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு ஜனவரி 10ம் தேதி செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் நிறைவடைந்தது. பாண்டியன், வைகை, முத்துநகர், பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அனைத்தும் முடிந்தது. தென் மாவட்டங்களுக்கு ரயில்களில் பயணம் செய்யும் 85 சதவீத மக்கள் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ததால், ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜனவரி 11ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்குகிறது. ஜனவரி 13ம் தேதிக்கான முன்பதிவு 15ம் தேதியும், 14ம் தேதிக்கான முன்பதிவு 16ம் தேதியும் தொடங்குகிறது. தொடர்ந்து, பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 19ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 20ம் தேதிக்கான முன்பதிவு வரும் 22ம் தேதி தொடங்கும்.

Related Stories: