இரட்டை கோபுரம் தகர்ப்பு; பைடன் மனைவி கண்ணீர்

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலின் 21ம் ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 11, 2001 ஆண்டு நான்கு விமானங்களை கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள்.,  நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீது 2 விமானங்களை மோதினர். இதில்,110 அடுக்கு இரட்டைக் கோபுரங்கள் தரைமட்டமாகின. இதில் 3,000 பேர் கொல்லப்பட்டனர். இத்துயர சம்பவத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் நேற்று, அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்துக்கு சென்ற மக்கள், மலர் அஞ்சலி செலுத்தினர். அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் கூறுகையில், ‘இரட்டை கோபுர தாக்குதல் தினத்தன்று, யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த எனது சகோதரி போனி ஜேக்கப்ஸ், கடத்தப்பட்ட 4 விமானங்களில் ஒன்றில் இருந்ததாக நினைத்து பதறினேன். பின்னர் அவர் பென்சில்வேனியாவில் உள்ள வீட்டில் இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன். அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஷாங்க்ஸ்வில்லில் உள்ள ‘பிளைட் 93’ நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளேன்,’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

Related Stories: