வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் இல்லாததால் சாலையில் பேருந்துக்காக பொதுமக்கள் கத்திருக்கின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலையும், பயணிகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சியில் பேருந்து நிலையம், ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலக அலுவலகம், தாலுகா அலுவலகம், காவல் நிலையம், வங்கிகள் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்து தான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள மேல்நிலை, நடுநிலை பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் பள்ளிக்காக வந்து செல்கின்றனர்.