பிரதமர் மோடி பெருமிதம்; சாதாரணமான சாதனை அல்ல

சூரத்:‘உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவானது சாதாரண சாதனை இல்லை,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத் நகரில் மிகப்பெரிய மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், ‘சமீபத்தில், இந்தியா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது. அம்ரித் மகோத்சவ் காலத்தில் இன்னும் கடினமாக உழைத்து மிகப்பெரிய இலக்குகளை அடைவதற்கு இந்த சாதனை, நம்பிக்கை அளித்துள்ளது. இந்த முன்னேற்றம் சாதாரணமானது அல்ல.

ஒவ்வொரு இந்தியனும் இதனை பற்றி பெருமைப்படுகிறோம். இந்த உற்சாகத்தை நாம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். நாடு முழுவதும் ஏழை மக்களுக்காக கடந்த 8 ஆண்டுகளில் 3 கோடி வீடுகளை ஒன்றிய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். தொடர்ந்து, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். இந்த மருத்துவ முகாமில் 66 ஆயிரம் பேர் பரிசோதனைக்காக பதிவு செய்துள்ளனர். 3 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்கிறார்கள்.

Related Stories: