திருப்புத்தூர்: திருப்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த தலைமை ஆசிரியையை வெட்டிக்கொன்று நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரஞ்சிதம் (52). இவரது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்டார். மகன் கோவை மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். மகள் திருமணமாகி பட்டுக்கோட்டையில் வங்கியில் பணிபுரிகிறார். திருப்புத்தூர் கான்பா நகரில் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் நேற்று காலை பள்ளிக்கு வரவில்லை. எனவே ஆசிரியர்கள் போன் செய்து பார்த்தனர். நீண்டநேரமாகியும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது ரஞ்சிதம் கை, கால்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.