திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னைப் புறநகர் பகுதியான திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் கோயிலில் திருமணம் செய்ய 30க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், வேண்டுதலின் காரணமாக முன்பதிவு செய்யாமல் பலரும் திருமணம் செய்ய வந்தனர். இதன் காரணமாக கோயிலின் வெளிப்பிரகாரம், உட்பிரகாரங்களில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக நின்று திருமணம் செய்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் பலரும் தங்களது வாகனங்களை கோயிலை சுற்றிலும் உள்ள சன்னதி தெரு, சன்னதி சந்து தெரு, நான்கு மாடவீதிகளில் நிறுத்தி விட்டு சென்றனர். மாடவீதிகளில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்களில் வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் திருமணங்களுக்கு வந்தவர்களும் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றனர். நேற்று ஒரே நாளில் திருமணங்களுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.