புதுடெல்லி: பாஜவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அங்கு ராகுலை சந்தித்து பேசினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜ உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராகி உள்ளார். இதைத் தொடர்ந்து, வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக நிதிஷ் குமார் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார்.முன்னதாக அவர் பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். பின்னர் விமானம் மூலம் டெல்லி வந்த அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.