கூடுவாஞ்சேரி: மாடம்பாக்கம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில், மாடம்பாக்கம், குத்தினூர், தாய் மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மாடம்பாக்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் அருகில் நேற்று நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி காசநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.