இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கன மழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மூன்று லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாணங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள புராதன சின்னங்கள் வெள்ளத்தில் சேதமடைந்து அழிந்து விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘சிந்துவில் உள்ள 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொகஞ்சதாரோ வரலாற்று தலத்தில் உள்ள ‘இறந்தவர்களின் குன்று’, லர்கானாவில் உள்ள ஷா பகாரோ தஜ்ஜார் புராதன கட்டிடங்கள், மொரோவில் உள்ள மியான் நூர் முகமது கல்கரோ கல்லறை உள்ளிட்ட 6 கல்லறைகள், ராணிக்கோட்டை மதில், ஷாகி மகால், வெள்ளை மாளிகை, பய்ஸ் மகால், துல் மிர் ருகானில் உள்ள புத்த ஸ்தூபி உள்ளிட்ட புராதன சின்னங்கள் சேதமடைந்து அழிந்து விட்டது,’ என கூறப்பட்டுள்ளது.