பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழா நாளை தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

சென்னை: போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழா நாளை தொடங்குகிறது.  எனவே நாளை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திரு.வி.கா.பாலம், எஸ்.வி.படேல் சாலையில் இருந்து பெசன்ட்  அவின்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்ல விரும்பும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடைசெய்யப்பட்டு, எல்.பி. சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டு அவர்கள் இலக்கை அடையலாம். 7வது அவென்யூ மற்றும் எம்.ஜி.ரோடு சந்திப்பில் இருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.  

எம்.எல்.பூங்காவிலிருந்து மாநகர பேருந்துகள், பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மேற்கண்ட வாகனங்கள் ஆவின்  பூங்கா, எல்.பி சாலை வழியாக, எம்.ஜி. சாலை, பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ மற்றும் எல்.பி சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Related Stories: