புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பதவி காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து, மூத்த நீதிபதியான யு.யு.லலித், உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை நடந்த பதவியேற்பு விழாவில், யு.யு.லலித்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.