ஐக்கியஅரபு அமீரகத்தில் டி.20 போட்டியாக நடக்கிறது: 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 1984ம் ஆண்டு முதல் இதுவரை 14 ஆசிய கோப்பை தொடர்கள் நடந்துள்ளது. இதில் இந்தியா 13 முறை பங்கேற்று 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 3 முறை 2வது இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 13 தொடர்களில் பங்கேற்று 2 முறை சாம்பியன் பட்டமும், 2 முறை 2வது இடமும் பிடித்துள்ளது. இலங்கை 14 தொடர்களிலும் ஆடி 5 முறை சாம்பியன் பட்டமும், 6 முறை 2வது இடமும் பிடித்துள்ளது.

இந்நிலையில் 15வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்கி வரும் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் இலங்கையில் நடைபெற இருந்த நிலையில் அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடரை இலங்கையே நடத்துகிறது. வழக்கமாக 50 ஓவர் அடிப்படையில் தொடர் நடத்தப்படும் நிலையில் இந்த முறை அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை டி.20 தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பையும் டி.20 தொடராகவே நடத்தப்படுகிறது.

இதற்கு முன் இதேபோல் 2016ம் ஆண்டு டி.20 தொடராக நடத்தப்பட்டுள்ளது. இந்த முறை நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடி தகுதி பெற்ற நிலையில் ஹாங்காங் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்து ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும்.

இந்த சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் துபாயில் செப்.11ம் தேதி பைனலில் பலப்பரீட்சை நடத்தும். போட்டிகள் அனைத்து இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணி்கள் மோதுகின்றன. நாளை மறுநாள் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த முறையும் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் களம் காண்கிறது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில்ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Related Stories: