நாகர்கோவில் : நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நள்ளிரவில் தொடங்கியது. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வு நேற்று நள்ளிரவு 12.01க்கு தொடங்கியது. செப்டம்பர் 1ம் தேதி அதிகாலை வரை முகாம் நடைபெற இருக்கிறது. திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தினமும் 3 ஆயிரம் பேர் வீதம் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று இரவில் இருந்து இளைஞர்கள் குவிந்தனர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து பெருமளவில் இளைஞர்கள் திரண்டு இருந்தனர்.