மீன், நண்டுகளுக்கும் கொரோனா சோதனை: சீனாவில் அதிரடி

பீஜிங்: சீனாவில் மீன்கள், நண்டுகள் என கடல்வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் வீடியோ வைரலாகி உள்ளது. சீனாவின் ஜியாமென் மாகாணத்தில் சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடலோர நகரமான இங்கு, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரிசோதனை பட்டியலில் கடல்வாழ் உயிரினங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், கவச உடைகளை அணிந்துள்ள மருத்துவ ஊழியர்கள், மீன்களின் வாயில் பஞ்சு குச்சியை விட்டு மாதிரிகளை எடுப்பதும், நண்டுகளின் ஓடுகளை திறந்து மாதிரிகளை சேகரிப்பதும் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஆதரவும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது. சிலர் இதுபோன்று கடல்வாழ் உயிரினங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதை விமர்சித்தும், கேலி செய்துள்ளனர். ஒரு சிலர், மக்களின் நன்மைக்காக செய்யப்படும் இதை வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.  இந்நிலையில், கடலுக்கு செல்லும் மீனவர்கள் தினமும் ஒரு முறையாவது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், கடலில் மீன் பிடித்து விட்டு திரும்பிய பிறகு தனக்கும், பிடித்து வரும் மீன், நண்டுகளுக்கும் தோராய அடிப்படையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Related Stories: