வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் முக்கிய கோப்புகளை கொண்டு சென்றதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பண்ணை வீட்டில் எப்பிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் 45வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், புளோரிடாவின் பால்ம் பீச்சில் உள்ள மார்-ஏ-லகோ எனும் டிரம்ப்பின் பண்ணை வீடு மற்றும் கிளப்பில் அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்பிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.
அந்த சமயத்தில் டிரம்ப் நியூயார்க்கில் இருந்துள்ளார். பதவி முடிந்து டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து செல்லும் போது, 15 பெட்டிகளில் ஆவணங்களை கொண்டு சென்றுள்ளார். பின்னர், தேசிய ஆவண காப்பகத்திடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கொடுத்துள்ளார். அதையும் தாண்டி இன்னும் சில முக்கிய ஆவணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து எப்பிஐ தற்போது சோதனை நடத்தி உள்ளது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, எப்பிஐ, நீதித்துறை தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.