மணலி எம்ஜிஆர் நகர் புதிய மேம்பால பகுதியில் மாநகராட்சி பெண் ஊழியர் கொலை? அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

திருவொற்றியூர்: மணலி எம்ஜிஆர் நகர் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகில், நேற்று காலை அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள், மணலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சடலமாக கிடந்தது திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி மைதிலி (38) என்பதும், இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி செய்து வந்ததும் தெரிந்தது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மைதிலிக்கும், திருவொற்றியூரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, வெளியில் பல இடங்களில் பைக்கில் சுற்றித் திரிந்துள்ளனர். இதுபற்றி அறிந்த மணிமாறன், தனது மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் மணிமாறன் நின்று கொண்டிருந்தபோது, அவரது மனைவி மைதிலி ஜெய்சங்கருடன் பைக்கில் வந்து இறங்கியுள்ளார். இதை பார்த்த மணிமாறன், இருவரையும் பிடித்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இனிமேல் என் மனைவியோடு உன்னை பார்த்தால் தொலைத்து விடுவேன் என்று ஜெய்சங்கரை எச்சரித்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்த மணிமாறன், தனது மனைவி மைதிலியை 2 நாட்களாக காணவில்லை, என்று புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், எம்ஜிஆர் நகர் மேம்பால பகுதியில் மைதிலி உடல் அழகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும், கடந்த 3ம் தேதி மணிமாறன் தனது மனைவி மைதிலியை பைக்கில் இந்த பாலம் வழியாக அழைத்து சென்றதை அப்பகுதியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர். எனவே, மணிமாறனை மணலி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மணிமாறன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வருவதால், அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகுதான், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை மணிமாறன் கொன்றாரா அல்லது வேறு காரணமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: