குத்தாலம் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் காஞ்சிவாய் சாலையை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

குத்தாலம் : குத்தாலம் அருகே காஞ்சிவாய் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் காஞ்சிவாய் ஊராட்சி காஞ்சிவாயிலிருந்து கும்பகோணம்-காரைக்கால் பிரதான சாலைக்கு செல்லும் சாலைக்கு இடையேயான சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகுந்த அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

மேலும் சாலையில் தாழ்வான பல பள்ளம் மேடுகளும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இந்த சாலை பயணம் மிகுந்த அளவில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சாலையில் அரிமானம் ஏற்பட்டு உள்ளதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காஞ்சிவாய், எழுவேலி, கத்திரிமூலை உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்லவும் விவசாயிகள் தங்களுக்கான பணிகளை மேற்கொள்ளவும் இந்த சாலை பிரதான சாலையாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தர இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த சாலையில் மின்கம்பம் மற்றும் மின் விளக்குகள் இல்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இரவு நேர பயணம் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: