சென்னை : பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியன் சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்வதில் பிரபலமானவர். கோபுரம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். இவரது வீடு உள்ளிட்ட அலுவலகங்களில் கடந்த 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.மதுரை காமராஜர் சாலை, கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் வருமானவரி துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.