திருவனந்தபுரம்: மத்திய தெற்கு வங்காள விரிகுடா உட்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி வருகிறது. இதனால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடுக்கி, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் 2 பேரும் நேற்று 4 பேரும் கனமழைக்கு பலியானார்கள். தென்மலை அருகே கும்பாவுருட்டி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த மதுரையை சேர்ந்த குமரன் (52) பலியானார். இதே போல, விழிஞ்ஞத்தில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த படகு கவிழ்ந்து குமரி மாவட்டத்தை சேர்ந்த கிங்ஸ்டன் என்பவர் பலியானார்.