விழுப்புரம்: சின்னசேலம் தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக சின்னசேலம் போலீசார், மாணவி இறப்பை சந்தேக மரணம் என்று பதிவு செய்தனர். அதன்பின் இறந்த மாணவிக்கு, நீதி கேட்டு, அப்பகுதி மக்கள் பள்ளியில் போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனையொட்டி தனித்தனி வழக்காக, மாணவியின் இறப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாரும், பள்ளியில் கலவரம் ஏற்படுத்தியது தொடர்பான வன்முறை வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றமும் விசாரணை செய்து வருகின்றது.