வேலூர்: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டியவர் கண்காணிப்பு குழுவினரிடம் சிக்கினார். பின்னர் போலீசில் புகார் அளித்து அவரைக்கொண்டே குப்பைகளை அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தனர். வேலூர் பகுதிகளில் உள்ள கறிக்கடைகள் உட்பட பல்வேறு இடங்களில் சேரும் குப்பைகளை பலர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் இறைச்சி கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.எனவே குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க குழு அமைத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சர்வீஸ் சாலையோரம் குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து பிடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தனி குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.