ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாவூற்று வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. கண்டமனூர் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோயில் 1960ம் ஆண்டு தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது. மாவூற்று வேலப்பர் கோயிலில் இதுவரை 1973ம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டு என 2 முறை மட்டுமே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1973ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது வேலப்பர் கோயிலில் முருகன் சிலை மற்றும் மயில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில், வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 20 ஆண்டுகள் ஆன நிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்படாதது பக்தர்கள் மத்தியில் பெறும் வருத்தம் இருந்தது. வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்களும், இந்து அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், தற்போதைய திமுக அரசு பழங்கால இந்து கோயில்களில் கும்பாபிசேகம் நடத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு கோயில்களில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.