பணம் வாங்கி கொண்டு பெண் பார்த்து கொடுக்காததால் பாலக்காட்டில் திருமண புரோக்கர் குத்திக்கொலை; மகன் படுகாயம்: வாலிபர் வெறிச்செயல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரூ.10,000 வாங்கிய பிறகும் பெண் பார்த்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர், திருமண புரோக்கரை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொப்பம் குலுக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் (60). திருமண புரோக்கர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லாயா என்ற பகுதியை சேர்ந்த முகமது அலி (40) என்பவர் தனக்கு பெண் பார்க்க வேண்டும்’ என அப்பாசை அணுகினார். அதற்கு அவர் கமிஷனாக ரூ.10,000 வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முகமது அலி சம்மதித்து பணத்தை கொடுத்துள்ளார். பல மாதங்களாகியும் அப்பாஸ் பெண் பார்த்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது முகமது அலிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நேற்று முகம்மது அலி ஒரு ஆட்டோவில் அப்பாசின் வீட்டுக்கு சென்றார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டினார். சத்தம் கேட்டு கதவை திறந்த அப்பாசிடம் பணத்தை திருப்பி கேட்டு முகமது அலி தகராறு செய்தார். அப்போது திடீரென முகமது அலி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பாசை சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பாசின் மகன் சிகாபுதீன் ஓடிவந்தார். அவரையும் முகமது அலி குத்திவிட்டு அதே ஆட்டோவில் தப்பி சென்றார். படுகாயமடைந்த அப்பாசை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அப்பாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொப்பம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று தப்பி ஓடிய முகமது அலியை கைது செய்தனர்.

Related Stories: