திருவள்ளூர் நகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி: பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற திட்டத்தில், பொதுமக்களின் பங்களிப்போடு நகரை சுத்தமாக வைத்துக்கொள்வது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருவள்ளூர் நகராட்சி 16வது வார்டு அய்யனார் அவென்யூ பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் எலைட் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை வகித்தார். துணை தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி கிளப் ஆப் எலைட் தலைவர் பாலாஜி, செயலாளர் ராகவேந்திரன், பொருளாளர் ராகுல் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன்.பாண்டியன், 16வது வார்டு உறுப்பினர் இந்திரா பரசுராமன், தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளும் நடப்பட்டது.

Related Stories: