மீஞ்சூர் பகுதியில் திடீர் சோதனை: 1 டன் பிளாஸ்டிக் பறிமுதல்: கடைக்காரர்களுக்கு ரூ.26,300 அபராதம்

பொன்னேரி: மீஞ்சூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்காரர்களுக்கு ₹26,300 அபராதம் விதிக்கப்பட்டது. மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகளவில் உள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை உதவி இயக்குனர் கண்ணனுக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று, மீஞ்சூர் பேரூராட்சியில் இயங்கி வரும் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். மீஞ்சூர், வேளாளர் தெரு, பஜார் பகுதி கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அங்குள்ள கடைகளில் இருந்து 1000 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ₹26,300 அபராதம் விதிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர்கள் அன்பரசு, கருப்பையா, சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: