தங்கம் விலையில் மேலும் மாற்றம்: 2 நாட்களில் சவரனுக்கு ரூ.528 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்றும் உயர்வை சந்தித்தது. தொடர்ந்து 2 நாட்களில் சவரனுக்கு ₹528 உயர்ந்துள்ளது. தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றிய அரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. அன்றை தினம் முதல் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தங்கம் விலை ஏறுமுகமாக இருந்தது. ஒரு வாரய காலத்தில் சவரன் ₹1000 வரை உயர்ந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் இருந்து வருகிறது. 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹4,630க்கும், சவரன் ₹37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை உயர்வை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ₹50 உயர்ந்து ஒரு கிராம் ₹4,680க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ஒரு சவரன் ₹37,440க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ₹16 உயர்ந்து ஒரு கிராம் ₹4,696க்கும், சவரனுக்கு ₹128 உயர்ந்து ஒரு சவரன் ₹37,568க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹528 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: