ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 20ம் தேதி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு - தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் ஒரு விசை படகையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய மீனவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர்.