தொடர் மழை எதிரொலி கேத்ரீன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

குன்னூர்: குன்னூரில் தொடர் மழை எதிரொலியாக கேத்ரீன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி, பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் குளிர் காரணமாக, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் பனி மூட்டம் காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டு பயணிகள் மெதுவாக சென்றன.

அதிகாலை வேளையில் கடும் குளிர் நிலவுவதால் கேரட் அறுவடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர்.

கடும் குளிரில் நடுங்கியபடி பொது மக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டனர். இரவில் சாரல் மழையும் விடாமல் பெய்து வருகிறது. தொடர் மழை எதிரொலியாக குன்னூர்- கோத்தகிரி பகுதியில் நீரோடைகள் புத்துயிர் பெற்றுள்ளன. டால்பின் நோஸ் பகுதியில் இருந்து பார்க்கும் போது கேத்ரீன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது தெரிகிறது. மேலும், காட்டேரி நீர் வீழ்ச்சிகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு  விருந்தளிப்பதாக உள்ளது.

Related Stories: