ஆம்பூரில் சொந்த உபயோக வாகனங்களில் தாமாக ஸ்டிக்கர்களை அகற்றிய போலீசார்

ஆம்பூர் : ஆம்பூரில் நேற்று போலீசார் தங்களது சொந்த உபயோக வாகனங்களில் தாமாக  முன்வந்து போலீஸ் ஸ்டிக்கர்களை அகற்றினர்.

தமிழகத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் தாங்கள் பயன்படுத்தும் சொந்த உபயோக வாகனங்களில் போலீஸ் அல்லது காவல் என்பதை பயன்படுத்தக் கூடாது எனவும், உடனடியாக அந்த ஸ்டிக்கர்களை அகற்றிடவும் உத்தரவிட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்பி பாலகிருஷ்ணன் இந்த சொந்த உபயோக வாகனங்களில் உள்ள போலீஸ் ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று ஆம்பூர் பஸ் நிலையம் அருகே போலீசார் தங்களது பைக், இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அகற்றினர். வாகனத்தின் முன்னும் பின்னும் ஒட்டப்படிருந்த ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்ட நிலையில் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள் தவிர இதர சொந்த வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் அகற்றும் பணி தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: