கோவை: தமிழகம் முழுவதும் 24ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று மாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகில் 63 நாடுகளில் குரங்கு அம்மையின் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் கூட கடந்த வாரம் கேரளாவில் ஒருவருக்கும், நேற்று தெலங்கானாவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். முதல்வரின் வழிகாட்டுதலின்பேரில் பன்னாட்டு விமான நிலையங்கள் இருக்கிற நகரங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலோ அல்லது மாவட்ட அரசு மருத்துவமனையிலோ பிரத்யேகமாக 10 படுக்கைகளுடன் கூடிய குரங்கு அம்மை நோய்க்கான பிரத்யேக வார்டு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் அந்த வார்டு தயார் நிலையில் உள்ளது.