கலவை அருகே பயங்கரம் விசிக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: சந்தேகத்தின்பேரில் 2 பேரிடம் விசாரணை

கலவை: கலவை அருகே விசிக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது இளைய மகன் பார்த்தசாரதி(35), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் எழுச்சி பேரவை ஆற்காடு தொகுதி செயலாளர். திருமணம் ஆகாதவர். இந்நிலையில் நேற்று காலை மழையூர் கிராமத்திலிருந்து செய்யாத்துவண்ணம் கிராமத்திற்கு செல்லும் சுடுகாடு அருகே விவசாய நிலத்தின் வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த பார்த்தசாரதியை மர்மநபர்கள் வழிமறித்து கை, கழுத்து, கால் என சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அங்கேயே பைக்குடன் சரிந்து ரத்த வெள்ளத்தில் அவர் பலியானார்.

தகவலறிந்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, எஸ்பி தீபா சத்தியன், ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து கலவை போலீசார் வழக்குப்பதிந்து, சடலத்தை கைப்பற்ற முயன்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலையாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்க விடமாட்டோம் எனக்கூறினர். அவர்களிடம் டிஎஸ்பி பிரபு, பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சடலம் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்தின்பேரில்  2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: