ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சி; 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல்; கேரள நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்; ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக சிரியாவுக்கு செல்லவும், பல இளைஞர்களை இந்த இயக்கத்தில் சேர்ப்பதற்காக கொண்டு செல்லவும் திட்டமிட்டிருந்த கண்ணூரை சேர்ந்த 3 பேருக்கு என்ஐஏ நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் கேரளாவிலிருந்து பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இவர்களில் பலர் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கண்ணூர் வளபட்டணம் பகுதியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஒரு கும்பல் ஆட்களை தேர்வு செய்வதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து என்ஐஏ நடத்திய தீவிர விசாரணையில் கடந்த 5 வருடங்களுக்கு முன் கண்ணூர் மண்டேரி பகுதியைச் சேர்ந்த மிதிலாஜ் (31) தலசேரியை சேர்ந்த ஹம்சா (61) மற்றும் சொக்கிக்குளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (28) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஐஎஸ் இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து அவர்களை சிரியாவுக்கு அனுப்பவும், பின்னர் இவர்களும் சிரியாவுக்கு சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து போராட தீர்மானித்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மிதிலாஜ் மற்றும் ஹம்சாவுக்கு 7 வருடம் கடுங்காவல் சிறையும், ₹50 ஆயிரம் அபராதமும் விதித்தது. ரசாக்குக்கு 6 வருடம் கடுங்காவல் சிறையும், ₹40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories: