உ.பியில் சோகத்திலும் நெகிழ்ச்சி: தாயை குதறிக் கொன்ற நாயை காப்பகத்தில் ஒப்படைத்த மகன்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம்,  கைசர்பாக் பகுதியைச் சேர்ந்தவர்  சுசீலா திரிபாதி. 82 வயது மூதாட்டியான இவருடைய  மகன் அமித். அப்பகுதியில் ஜிம் பயிற்சியாளராக உள்ளார்.  இவர் தனது வீட்டில் ‘பிட்புல்’ உள்ளிட்ட உயர் ரக நாய்களை வளர்த்து வருகிறார். ‘பிரவுனி’ என்ற பெயரிடப்பட்ட பிட்புல் நாயை கடந்த 3  ஆண்டுகளாக அமித் வளர்த்து வருகிறார்.  இந்நிலையில், நேற்று காலை சுசீலா வீட்டில் தனியாக இருந்த போது பிரவுனி அவரை கடித்து குதறியது. அவர் வலியால் கதறினார். அவருடைய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை.  விஷயத்தை கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்த அமித், தனது தாய் ரத்த வெள்ளத்தில்  கிடப்பதை கண்டு அதிர்ந்தார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால், ஏற்கனவே ரத்தம் அதிகமாக வெளியேறி விட்டதால் போகும் வழியிலேயே அவர் இறந்தார். சுசீலாவின் உடலில் கழுத்து முதல் வயிறு வரை  12 இடங்களில் நாய் கடித்ததால் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருந்தன. இந்த நிலையிலும், தாயை கொன்ற அந்த நாயை  எதுவும் துன்புறுத்தாமல், நாய்கள் காப்பகத்தின் வாகனத்தை வரவழைத்து, அமித் அதை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார். அதை கண்ட அப்பகுதி மக்கள் நெகிழ்ந்தனர்.

Related Stories: