போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெணுகொண்டாபுரத்தில் பெரிய ஏரி உள்ளது. 240 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, தற்போதைய மழையால் நிறைந்து கடல் போல் காட்சியளிக்கிறது. பெணுகொண்டாபுரம் ஏரி, பாரூர் பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரால் நீர்வரத்து பெறுகிறது. பாருர் ஏரிக்கு அடுத்த பெரிய ஏரியான பெணுகொண்டாபுரம் ஏரியிலிருந்து தீர்த்தகுட்டை ஏரி, எத்தலான் ஏரி, மோட்டாங்குட்டை ஏரி, நாகலேரி என 4 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியை நம்பி சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெணுகொண்டாபுரம் ஏரியின் மதகு உடைப்பட்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் சேமிக்கப்படாமல் இருந்து வந்தது. புதிய மதகு அமைக்கப்பட்ட பின் இந்த ஆண்டு தண்ணீர் சேமிக்கப்பட்டு ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த ஏரியின் மதகு அருகே சுமார் 500 மீட்டர் தொலைவில் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.