சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். தஞ்சாக்கூர் கிராமத்தில் உள்ள காவேரி ஐயனார் சமையக்கருப்பண்ண சுவாமி கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆலடிநத்தம், முகவூர், புளவர்சேரி ஆகிய கிராம மக்களும் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு விழாவில் 21 குதிரை பொம்மைகளை திருமணமாகாத இளைஞர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்து கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கானப்பேட்டையில் பூமீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆணி பிரம்மோற்சவத் திருவிழாவை முன்னிட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு 5 தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது. முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட முதல் தேரில் விநாயகரும், இரண்டாம் தேரில் முருகனும், மூன்றாவதில் பூமீஸ்வர ஸ்வாமியும், பிரம்ம வித்யாம்பாளும், நான்காவதில் அம்பாளும், ஐந்தாவது தேரில் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். குழந்தைகளுக்கு கல்வி அறிவு, ஆரோக்கியம் வேண்டி தேர் காலில் படுக்கவைத்து பக்தர்கள் நேர்த்தி கடன்செலுத்தினர்.