கபினி, கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 1,10,000 கன அடி தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு

மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 78,000 கனஅடி வீதமும், கபினி அணையில் இருந்து 38,000 கனஅடி வீதமும் என விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர், தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு பெருக்கெடுத்து வருகிறது.

ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை பிலிகுண்டுலுவில் 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 6 மணியளவில் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெயின்அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் பாறைகளை மூழ்கடித்தவாறு புதுவெள்ளம் பொங்கி பாய்கிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் நேற்று காலை 8,010 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 98.29 ஆக இருந்தது நேற்று 98 அடியாக சரிந்தது.

Related Stories: