சங்கரன்கோவில்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,308 டாக்டர், செவிலியர் பணியிடங்கள் செப்டம்பர் மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சங்கரன்கோவில் அருகே புற்றுநோய் பாதிப்பு உள்ள ஆராய்ச்சிபட்டி கிராமத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 பேரின் வீடுகளுக்கு சென்ற அமைச்சர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம் வழங்கப்படும் மருந்துகளை சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று வழங்கினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: ஆராய்ச்சிபட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 1340 பேர் உள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு புற்றுநோயின் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.