ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து; சென்னை மருத்துவ கல்லூரி மாணவி பலி; ஏலகிரிக்கு சுற்றுலா வந்த போது சோகம்

ஆம்பூர்: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வந்த கார் ஆம்பூர் அருகே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மருத்துவ மாணவி உயிரிழந்தார். கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே மதுவாடா கிராமத்தை சேர்ந்தவர் நிஷாத்அஹ்மத்(20). சென்னையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் ஆந்திர மாநிலம் திருப்பதி ராமச்சந்திரா நகரை சேர்ந்த சண்முகி(22), அந்தமான் போர்ட்பிளேரை சேர்ந்த அலினா(18), சஜான்(18), ஆந்திரமாநிலம் நெல்லூரை சேர்ந்த ரித்தின்(20), கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுப்ரீத்(19) ஆகியோர் படித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைக்கு சுற்றுலாவுக்காக காரில் புறப்பட்டனர். காரை நிஷாத் அகமது ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆம்பூர் அடுத்த மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலுள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

 இதில் காரில் வந்த சண்முகி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா அப்பகுதி மக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு சண்முகியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: