நாகப்பட்டினம் : பக்ரீத் குர்பானிக்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து நாகூரில் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.இறைவனின் கட்டளையை ஏற்று தன் மகனை தியாகம் செய்ய துணிந்த இப்ராகிம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகையின் போதும் அடுத்த 3 நாள்களுக்கும் ஏழை, எளியோருக்கும், குடும்பத்தினருக்கும் இஸ்லாமியர்கள் குர்பானி வழங்குவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நாளை (10ம் தேதி) நடைபெறுகிறது. பக்ரீத் பண்டிகையின் போது ஒவ்வொரு ஆண்டும் நாகூரில் 200-க்கும் அதிகமான ஆடுகள் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும்.