திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

குலசேகரம்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418  ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான குமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுமார் 418 ஆண்டுகளுக்கு பிறகு  நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான பூஜைகள் கடந்த 29ம் தேதி தொடங்கி, சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடந்து வந்தன.  நேற்று அதிகாலை 3.30க்கு கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை, சுப முகூர்த்த பிரதிஷ்டை, உபதேவன்மார்களுக்கு பிரதிஷ்டை நடந்தது. காலை 6 மணிக்கு அஷ்டப பந்தன மகா கும்பாபிஷேகம் தொடங்கியது. 7 கலசங்களுக்கும் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கருவறை விமானம் 5 கலசங்களுடனும், உதயமார்த்தாண்ட மண்டபத்தில் ஒரு கலசமும், சாஸ்தாவுக்கு ஒரு கலசமும் வைக்கப்பட்டு அபிஷேகங்கள் நடந்தன.

பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா... என விண்ணதிர முழக்கமிட்டனர். இந்த காட்சி பெரும் பரவசத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., மாநகராட்சி மேயர் மகேஷ், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் அரவிந்த், எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தை காண நேற்று முன்தினம் இரவு முதலே கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். கோயிலில் உள்ள 4 பிரகாரங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று அதிகாலை 3.30 மணி முதல் கோயிலுக்கு வெளியே நின்ற பக்தர்கள் மேற்கு வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

* சமயபுரம் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி அண்மையில் முடிவுற்றது. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு கிழக்கு ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பச்சை துண்டு வீசி துவக்கி வைத்தார். இதையடுத்து சிவசாச்சாரியார்கள் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கோபுரத்தை சுற்றி நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்  சக்தி, பராசக்தி என உணர்ச்சி பெருக்கோடு விண்ணதிர கோஷமிட்டனர்.

Related Stories: