மொடக்குறிச்சியில் ஷேர் சாட் மூலம் பழகி மாணவியை பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டியவர் கைது

ஈரோடு: மொடக்குறிச்சியில் மாணவியை பலாத்காரம் செய்து, படத்தை அவரது தந்தையின் வாட்ஸ் அப்க்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 முடித்துள்ள 17 வயது மாணவி ஒருவர், கடந்த 2020 கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார். இதற்காக ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வந்தார். அப்போது ஷேர் சாட் என்ற செயலி மூலம் பழனியை அடுத்த வயலூரை சேர்ந்த ஜேசுதாஸ் (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் பேசி பழகி வந்தனர்.

கடந்தாண்டு அக்டோபர் 21ம் தேதி அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அங்கு வந்த ஜேசுதாஸ், திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியிடம் நெருக்கமாக இருந்தார். அதை மாணவிக்கு தெரியாமல் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பலமுறை மாணவி வீட்டிற்கு சென்று ஜேசுதாஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. சமீபகாலமாக ஜேசுதாசின் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வாட்ஸ் அப் எண்ணுக்கு ஜேசுதாசும், மாணவியும் ஒன்றாக இருக்கும் போட்டோவை அனுப்பி தனக்கு பணம் தர வேண்டும் என்றும், இல்லையெனில் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், ஜேசுதாஸ் கோவையில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஜேசுதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: