தரம் குறைவு புகார் எதிரொலி; மதிய உணவை ருசித்த முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம், பெங்களூருவை சேர்ந்த அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 300 பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கு உணவளிக்க திட்டமிட்டனர். இதற்காக லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு சமையல் கூடம், சில ஆண்டுகளுக்கு முன்பு அட்சய பாத்ரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

 கடந்த 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரொட்டிப் பால், ஊட்டச்சத்து பானம் மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவை அட்சய பாத்ரா அமைப்பானது, அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கி வருகிறது. தயிர், தக்காளி, சாம்பார் சாதம் என்ற அடிப்படையில் மதியம் சைவ உணவினை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது. லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவுக்கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தனியார் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியின்றி வழங்கப்படுவதாக பொது நல ஆமைப்பினர் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். உணவின் தரம் தொடர்பாக பள்ளிகள் தரப்பில் மாணவ, மாணவிகள் கருத்துகளும் பெறப்பட்டன. இந்தநிலையில் நேற்று மதியம் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டது.

 மதிய உணவின் மாதிரியை முதல்வர் ரங்கசாமி சாப்பிட்டு பார்த்தார். அதிகாரிகள் கூறுகையில், ‘’இனி மாணவ, மாணவிகளுக்கு தரப்படும் மதிய உணவின் மாதிரியை முதல்வர் அலுவலகத்துக்கும் கல்வியமைச்சர் அலுவலகத்துக்கும் அட்சய பாத்ரா அமைப்பினர் அனுப்பி வைக்கவேண்டும். மதிய உணவின் தரத்தை தினமும் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: