மணல் கடத்திய அதிமுக கவுன்சிலருக்கு வலை

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோமலாபுரம் பாலாற்றில் இருந்து அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பிக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை மடக்கிப்பிடித்தனர்.

போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.டிராக்டரை சோதனையிட்டதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், டிராக்டர் ஆம்பூர் நகராட்சி 6வது வார்டு கவுன்சிலரான அதிமுகவை சேர்ந்த ஜெயபால் (35) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதை தொடர்ந்து ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: