காரியாபட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட மகாவீரர் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

காரியாபட்டி : காரியாபட்டி அருகே பெ.புதுப்பட்டி அருகே காட்டுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் ராகவன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் பட்டப் படிப்பு மாணவர்களான சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 அடி உயரம், இரண்டே கால் அடி அகலம் கொண்ட ஒரு சிலையை கண்டறிந்தனர். இது குறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளர் சாந்தலிங்கத்திடம் ஆலோசித்து இச்சிற்பம் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த சமண சிற்பம் என உறுதிசெய்யப்பட்டது.

தொல்லியல் ஆய்வாளர் ராகவன் கூறுகையில், இச்சிலை வர்த்தமானர் எனும் சமணர் சமயத்தின் 24வது தீர்த்தங்கரான மகாவீரர் சிலையாகும்.

 தியான நிலையில் அமர்ந்தவாறும் அர்த்தபரியங்க ஆசனத்தில் யோக முத்திரையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் ஒளிவீசும் பிரபா வளையம், பின்புலத்தில் குங்கிலியமரம், பக்கவாட்டில் சித்தாக்கிய இயக்கி, இயக்கனான மாதங்கன் சாமரம் வீசுவதுபோல் உள்ளது. இச்சமண சிலையை அங்குள்ள மக்கள் சமணர் சாமி என்று அழைத்தும், தங்களின் குலதெய்வமாக எண்ணியும், குறிப்பிட்ட நாளில் பொங்கலிட்டும், முடி காணிக்கை செலுத்தியும் வணங்கி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சமணர் சார்ந்த நிகழ்வுகளை தொடர்ச்சியாக காணும்போது மக்கள் சமய சகிப்புத்தன்மை கொண்டிருந்தனர் என்பதையும் உணர முடிகிறது. எனவே தொல்லியல் ஆய்வு மையம், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.இதுகுறித்து கடந்த மே மாதம் 11ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு தொல்லியல் துறையின் நடவடிக்கையின்பேரில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மகாவீரர் சிலையை பாதுகாப்பாக எடுத்து விருதுநகர் அருங்காட்சியத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று காரியாபட்டி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் எஸ்.ஐ.பிச்சைபாண்டி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தலைமையில் பெ.புதுப்பட்டிகாட்டுப் பகுதியில் இருந்த மகாவீரர் சிலையை பாதுகாப்பாக மீட்டனர். இந்த மகாவீரர் சிலையை விருதுநகர் அருங்காட்சியத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: