சின்னமனூர் பகுதிகளில் நெல்சாகுபடிக்கு நிலத்தை தயார்படுத்தும் பணி தீவிரம்

சின்னமனூர் : சின்னமனூர் பகுதிகளில் வேம்படி களம் பரவு, கருங்கட்டான்குளம் பரவு, முத்துலாபுரம் பரவு, பெருமாள் கோயில் பரவு, மார்க்கையன் கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கரளவில் விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் முல்லை பெரியாற்று நேரடி பாசனத்தின் வாயிலாக இருபோகம் நெல்சாகுபடி விவசாயம் நடந்து வருகிறது.

அதற்காக தமிழக அரசு உத்தரவின் பேரில் கடந்த ஜூன் மாதம் முதல் தேதியில் முல்லைப் பெரியாற்றில் பாசன நீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் பெரிய வாய்க்காலின் வழியாக பல்வேறு குளங்களுக்கு சென்று தேங்கி வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் 25 நாட்களில் நெல் நாற்றாக கிடைக்க நாற்றாங்கால் பாவினர். அதனை தொடர்ந்து தற்போது நெல் நாற்றாக வளர்த்து தயார் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து நடவு செய்ய விரைவுபடுத்தும் விதமாக வயல்களில் பாசனநீரை நிரப்பி மண்ணை நனைய விட்டு மாட்டு சாணம் மற்றும் இயற்கை உரங்களையும் சேர்த்து மக்க விட்டு டிராக்டர் நிலத்தை தயார்படுத்தம் (பரம்படிக்கும்) பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ விவசாய தொழிலாளர்களுடன் நெல் நாற்றுகளை நடவிற்கு தயார்படுத்தி வருகின்றோம். சின்னமனூரில் முதல் போகத்திற்கான நாற்றங்கால் பாவி 25 நாட்களில் நெல்நாற்று வளர்ந்து தயார் நிலையில் உள்ளதால், நாற்றுகளை கட்டுகட்டாக சேகரித்துள்ளோம். நெல் நடவு துவங்குவதற்கு ஏற்ற வகையில் நேற்று வயல்வெளிகளில் பரம்படிக்கும் பணியினை செய்து பாசன நீர் நிரப்பி வைத்துள்ளோம், என்றார்.

Related Stories: